ஞாயிறு, 28 ஜூன், 2026

துளிகள் - 19 - விதியை வெல்லும் வழி – இறைபிரார்த்தனையும் புண்ணிய பலமும்!


விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவகிரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல. ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. எனவே விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால் மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 27 ஜூன், 2026

துளிகள் - 18 - நற்குணம் கொண்டவருக்கு எல்லா நாளும் திருநாளே!


இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் எப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ, அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன், மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ, மனித நேயத்தோடு தன் கடமைகளையும் சரி வர ஆற்றுகிறானோ, அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொருத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி, நக்ஷத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது, அன்றாவது ஒரு மனிதன் தன் புறக்கடமைகளை விட்டு,விட்டு முழுக்க, முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே ஒரு மனிதன் நடந்து கொள்வதைப் பொறுத்து.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 26 ஜூன், 2026

துளிகள் - 17 - என்னை நீ ஆக்கிவிடு – இறைவனிடம் வைக்க வேண்டிய உயர்ந்த பிரார்த்தனை!


இறைவனைக் காண வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் மனதினுள் இருக்கும். இப்படிப்பட்ட ஆசையை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்கும்பொழுதே, "இறைவா! நீ என்னை ஆட்கொண்டுவிடு. எப்படி என்றால், நீ வேறு, நான் வேறு என்று இல்லாமல், நதியானது தனியாக இருக்கும்பொழுது நதியாகவும், கடலில் சேர்ந்த பின் கடலாகவும் மாறிவிடுவது போல, என்னை நீ ஆக்கிவிடு. அந்த இடத்தில் இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாது. அதுபோல என்னை நீ ஆக்கிவிடு" என்ற பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும். இறைவன் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 20 ஜூன், 2026

துளிகள் - 16 - அன்னம் உண்ணும் போது தெய்வங்களை விருந்தாளியாக அழைக்கும் சூட்சுமம்!


அன்னம் உண்ணும் போது கிழக்கு அல்லது மேற்கை நோக்கி அமர்ந்து அன்னபூரணி தாயை தியானித்து, இஷ்ட தெய்வங்களை அழைத்து உடலுக்குள் அமரச் செய்து, மௌனம் கடைப்பிடித்து, இந்த அன்னமானது நல்ல எண்ணங்களைத் தரட்டும், நல்லதைச் செய்கிற சக்தியைத் தரட்டும், தெளிவைத் தரட்டும், ஞானத்தைத் தரட்டும், ஆரோக்கியத்தைத் தரட்டும் என வேண்டிக்கொண்டு தொடர்ந்து உண்டு வந்தால், விருந்தாளியாக அழைக்கப்பட்ட தெய்வம்கூட உள்ளுக்குள் இருந்து அன்னம் உண்பதை நம் மனக்கண்ணில் அல்லது நமது தியானத்தில் சில நாட்களில் காணலாம். அது மிகப் பெரிய ஒரு பாக்கியம் எனக் கூற வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 16 ஜூன், 2026

துளிகள் - 15 - மயானம் கற்பிக்கும் பற்றற்ற வாழ்வின் சூட்சுமம்!


ஆசை அறுக்க வேண்டும், பற்று அறுக்க வேண்டும் என பல கேள்விகளும் இங்கு கேட்கப்படுகிறது. தன்னை அறுக்க தன் வினைகளை அறுக்க சரியான பாடம் மயானத்தில் கற்பிக்க படுகிறது. விரும்பும் ஒருவன், ஒரு இரவு மயானத்தில் அமர்ந்து, தவமாக ஒரு பிணம் எரிந்து அடங்குவதை கண்டு, நடப்பவைகளை உள்வாங்கினால், ஆசையும் பற்றும் அறுப்பதெப்படி என்று உணர முடியும். மனம் ஒன்றுபட்டுவிடும்!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 14 - தெரிந்தே ஏமாறுதல் - ஒரு கர்ம விடுதலை!


இவ்வுலகில், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என இரண்டு வகை மனிதர்களும் உண்டு. அதிலும் தெரிந்தே ஏமாறுகிறவன் சிறந்த பாக்கியசாலி. எப்படி? ஒருவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆயினும், ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது, ஏமாறுகிறவன் உணர்ந்தே இழந்தால், அவனை விட்டு நிறைய கர்மாக்கள் ஏமாற்றுகிறவன் கைக்கு போய்விடும். ஏமாற்றியவன், அதை சுமந்து வருந்தி, இன்னும் நிறைய ஜென்மாக்கள் எடுத்து, எப்படி இந்த கர்மாவை கழிப்பது என்று தெரியாமல் தவிப்பான். இது, இழப்பவன், உணர்ந்த நிலையில் மட்டும்தான் சாத்தியம். உணர்ந்தே இழக்கும் பொழுது, இழப்பவனுள் சாட்சி பூதமாக இறைவனே இறங்கி நின்று கொண்டிருப்பான். ஆகவே, ஏமாற்றுபவன் தப்பிக்கவே முடியாது!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 10 ஜூன், 2026

துளிகள் - 13 - ஆலயத்தில் தோன்றும் தாகமும் பசியும் ஒரு தெய்வீக நிமித்தம்!


கோவில் மற்றும் பெரியவர்களோட சமாதி போன்ற இடங்களில் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது ஒருவருக்கு தாகம், பசி போன்ற உணர்வுகள் திடீரென தோன்றினால் அது ஒரு நிமித்தம். அங்கு இருக்கும் சக்தியானது, "என்ன வேண்டுமோ கேள், உனக்கு ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்" என்று சுட்டிக்காட்டுகிற நிமித்தமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் வைக்கக்கூடிய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும். இந்த உணர்வும் தெளிவும் ஒரு மனிதனுக்கு இருக்க, அவன் நடந்து செல்கிறான் என்றால் மேலும் ஆன்மீகத்தினுடைய படிகளில் முன்னேறுவதற்கு அது அவனுக்கு வழியைக் காட்டும்.

மிக உயர்ந்த நிலையில் உள்ள பெரியவர்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் பொழுது, "இறைவா, நீ இருக்கிறாயே, அது ஒன்றே எனக்குப் போதும்" என்று பிரார்த்தனையை கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 9 ஜூன், 2026

துளிகள் - 12 - ஆட்டிசம் குறைபாடும் ஆன்மீக பரிகாரமும்


மனிதர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் அவர்களுக்கான தண்டனை வியாதியாகவோ, உடல் குறைபாடுகளாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ இறைவனால் வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் (Autism) எனப்படும் குறைபாடு தற்போது பல குழந்தைகளைப் பாதித்து, அவர்களது பெற்றோருக்கு மனவேதனையை அளித்து வரும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதில் முக்கியமாக, இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, சில தவறுகளுக்கான தண்டனைகள் குறித்து தர்ம சாஸ்திரங்களில் குறிப்புகள் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில ஆத்மாக்கள் செய்த தவறுகளை ஒரு குறிப்பிட்ட தண்டனையின் கீழ் வகைப்படுத்த முடியாத சூழ்நிலையில், பலவிதமான தவறுகளின் விளைவாக இத்தகைய நோய்கள் அல்லது குறைபாடுகள் இறைவனால் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் என்னவென்று புரியாத நிலையிலும், தாங்கள் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் முழுமையாக உணர முடியாத நிலையிலும், பெற்றோர்களுக்கும் இத்தகைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விதி அமையும்போது, இவ்வாறான வாழ்க்கை அமைந்து விடுகிறது.

மருத்துவ ரீதியாக பல சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், ஆன்மீக ரீதியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜ மூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களையும் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு வந்தால், இந்த ஆட்டிசம் குறைபாடுகள் மெதுவாக நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 5 ஜூன், 2026

துளிகள் - 11 - குருவை இகழும்போது சீடன் எப்படி நடக்க வேண்டும்?


மனத்தால் ஒருவரை குருவாக வரித்துக் கொண்டுவிட்டால், அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும், அவரது வார்த்தைகள் ஒருவர் மனதுக்கு அமைதியை தந்தால், அவரது வழிநடத்தல் நிறைய நல்லதை, நல்ல விஷயங்களை வாழ்வில் அளித்தால், அவர் குரு ஸ்தானத்துக்கு உரியவர்.

சீடர், மனதுள் குருவுக்கான மரியாதையை பிரார்த்தனை வழி கொடுத்தாலும் போதும்.

அதே நேரத்தில், சீடத்துவத்தை சோதிக்கும் படி மூன்றாவது மனிதர் குருவை இகழ்ந்தால், ரௌத்ரம் உள்ளே பொங்கினாலும், கட்டுப்பாடுடன் அமைதியாக அங்கிருந்து, "சிவ சிவா" என்று கூறி செவி பொத்தி விலகி விட வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த கட்டுப்பாடு எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாராகினும், குருவை குறை கூறுவதை கேட்கும் பொழுது, அப்படி ரௌத்திரம் பொங்கி வார்த்தைகளை சிதறவிட நேர்ந்தால், இறையை துணைக்கழைத்து, நாக்கின் நுனியிலிருந்து வாக்குகளை உதிர்க்கலாம்.

உதிர்த்த வாக்குகள் குறிப்பிட்ட காலத்தில் அதன்படியே அவர்கள் வாழ்க்கையில் நடந்தால், அது இறை செயல், நம் செயல் அல்ல என்று உணர வேண்டும்.

ஆனால், எந்த காரணம் கொண்டும் எதிரே பேசுபவர் உயிர் போகிற அளவுக்கான வார்த்தைகளை பேசக்கூடாது. அது பிரம்மஹத்தி தோஷத்தை கொண்டு தந்து விடும்.

ஆனால் ஒன்றை கவனிக்கவும். வாக்கை உதிர்த்துவிட்டால், அடுத்த நொடி முதல் விஸ்வாமித்ரர் நிலை தான் நமக்கு. நாம் அன்று வரை சேர்த்துக் கொண்ட தவசக்தியின் பெரும் பகுதியை இழந்துவிடுவோம்!

மறுபடியும் நிறைய தவம் செய்ய வேண்டும், பழைய நிலையை அடைய!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 4 ஜூன், 2026

துளிகள் - 10 - வீட்டில் விளக்கு ஏற்றும் மற்றும் அணைக்கும் சரியான முறை


​தினமும் வீட்டில் இரண்டு நேரம் விளக்கேற்ற வேண்டும் — ஒன்று காலை, மற்றொன்று மாலை. விளக்கினை ஏற்ற தீக்குச்சியை உரசி அக்னியை உருவாக்கியதும், அனைத்து தெய்வங்களின் பார்வை படும் படி காட்டிவிட்டு, மனதுக்குள் "உங்கள் பார்வை பட்ட அக்னிதான் விளக்கில் ஜொலிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு, 'ஓம்' என்று கூறி திரிக்கு அக்னியை தரவேண்டும். இவ்வாறு விளக்கினை ஏற்ற வேண்டும்.

​அதேபோல் விளக்கினை அணைக்கும் போது 'ஓம்' என்று கூறிகொண்டே திரியை எண்ணெய்க்குள் இழுத்து விட வேண்டும். கையால் அணைப்பதோ அல்லது ஊதி அணைப்பதோ கூடாது.

​வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்

புதன், 3 ஜூன், 2026

துளிகள் - 8 - உடல் சூடு, சைனஸ், கண் பார்வை: அகத்தியர் காட்டிய ஆரோக்கிய வாழ்வியல் முறை!


பெரியவர்களும், குழந்தைகளும், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற, ஒரு சில நல்ல விஷயங்களை, அவரவர் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தி வந்தாலே, நல்ல பலன் கிடைக்கும்.

கண் பார்வை பாதிப்புக்கு காரணம், உடலுக்குள் மேல்நோக்கி செல்லும் அக்னி அல்லது சூடுதான். மேலும் குளிக்கும் பொழுது செய்கிற தவறுதான் முதன்மையான காரணம்! ஒரு சில பேர் தவிர அனைவரும் முதலில் தலையில் நீர் ஊற்றுவார்கள். அது தவறு. சாதம் கொதிக்கவைக்கிற பானையில் மேலாக கஞ்சியும் அரிசியும் கொதிப்பது போல் தலையில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கும். நீர் தலையில் விழுந்ததும் அந்த அக்னி அங்கிருந்து விரட்டப்பட்டு கீழ் நோக்கி அழுத்தப்படும், அது நம் உடலில் கண்ணில் உள்ள மிக மென்மையான லென்ஸசை தாக்கும். எந்த பக்கம் லென்ஸ் வளைகிறதோ அதற்கு ஏற்ப பார்வை சரி செய்ய கண்ணாடி போடுகிறார்கள். அப்படியானால் சரியான முறை என்ன? 

குளிக்க தொடங்கும் முன், குளிர்ந்த நீரை ஒரு கை நிறைய எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முதலில் காலில் நீர் ஊற்றி மேல் நோக்கி நீர் ஊற்றி வரவேண்டும். உடலுக்குள் இருக்கும் சூட்டை நீரானது மேல் நோக்கி விரட்டி வரும். தொண்டை பக்கம் நீர் வந்தவுடன் வாயிலிருக்கும் நீர் ஓடி வந்த அக்னியை உள் வாங்கி கொள்ளும். பின்னர் தலையில், முகத்தில் நீர் ஊற்றும் பொழுது மேலிருந்து அக்னி கீழ் இறங்கும், அதையும் வாயிலிருக்கும் நீர் உள்வாங்கும். கண்ணை தாக்க அக்னியே இருக்காது. கண் உள்ளிருந்து குளிர்ந்து விடும்.

மேலும் குழந்தைகள் உறங்கும் முன் அவர்கள் தலை உச்சியில், தொப்பிளில் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் இரவு முழுவதும் அவர்கள் தலைக்கு வரும் சூட்டை அது தணித்து விடும்.

வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் இல்லை என்று சொன்னாலும், மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

உண்ணும் உணவில் காரத்தை தவிர்ப்பது அல்லது நிறையவே குறைத்துக் கொள்வது நல்லது. குடல் சூடாவதை தவிர்க்கலாம். குடல் சூடுதான் மேல் நோக்கி வேகமாக போகும். அக்னி வேகமாக குளிரும்பொழுது நீராக மாறி உடலில் பல இடங்களில் கட்டும், பின்னர் சளியாகும் அதுவே கன்னத்தில் தங்கி "சைனஸ்" என்றாகும். எப்போதும் சூட்டை ஆணிவேரில் அறுத்தால், பல வியாதிகளை தவிர்க்கலாம்! 

இவை அனைத்தும் பரீட்ச்சித்து பார்க்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது, மேலும் பல சித்தர்கள் வாழும் முறையில் சொல்லிப்போன விஷயங்கள் இவை.

அகத்தியப்பெருமானுக்குத்தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!