சனி, 18 ஜூலை, 2026

துளிகள் - 30 - உணர்ந்து திருந்துவதே இறைவனின் விருப்பம்!


ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே ? தண்டித்து விடலாமே ? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன் ? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலேவிட்டு ‘ இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது ‘ என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 29 - தடைகள் வந்தாலும் தர்மத்தை விடாதே!


கொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப்போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக்கொண்டேயிரு. 

இதில் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம் ? தர்மம் செய்ய, செய்ய, இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா ? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். ‘ இப்படி கொடுத்துக்கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய் ? என்பதுபோன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இதுபோன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல், சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 28 - விரும்பியதை விலக்கும்போதுதான் ஆன்மப் பயணம் தொடங்குகிறது!


நல்ல கர்மாக்களின் எதிரொலியால் விளைகின்ற நல்ல விஷயங்களை மனிதன் அனுபவித்து போகட்டும் என்று இறைவன் உத்தரவிட்டாலும், அவன், அதிலேயே ஒட்டி நின்று ஆன்ம வழியை காணாமல், இகபர விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுகிறான். ஆகவே, சிறப்பாக இருந்தவனைக் கூட சில நேரங்களில் யாங்கள் கீழே இறக்க வேண்டி உள்ளது. மனம் பக்குவம் அடைவது என்பது அத்தனை எளிதல்ல. மனிதன் எப்பொழுது, மிக விரும்பி அடைந்த விஷயத்தை கூட வேண்டாம் என விலக்கி வைக்க தொடங்குகிறானோ, அந்த நொடி முதல் எங்கள் பாதையில் நடக்க தொடங்கிவிட்டான் என்று பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!


நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல் வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 17 ஜூலை, 2026

துளிகள் - 26 - இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சித்தர்களே உங்களைத் தேடி வருவார்கள்!


ஒருவனுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அவனுக்கு, சித்தர்கள் மீதும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவனுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வழியாக உள்புகுந்து செய்தியை அவனுக்கு தெரிவித்து விடுவோம். அதற்கு, ஓலைச்சுவடியோ, நேரில் தோன்றவேண்டும் என்பதோ தேவை இல்லை!

எனவே, ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், இறைவனுக்கு பிடிக்குமோ, அதை கண்டுபிடித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், எங்கள் தரிசனமும், அருகாமையும் இயல்பாக கிடைக்கும். அனைத்தும் ஒரு மனிதன் நடந்து கொள்வதில்தான் உள்ளது.

வாக்குரைத்தவர் அகத்தியப்பெருமான்!

துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!


யார் என்ன கூறினாலும் மனக்குழப்பம் அடையாமல் நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா ? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா ? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற மனிதனுக்கு இல்லாமல் போகிறது ? ஏன் தடுமாற்றம் வருகிறது ? ஏன் குழப்பம் வருகிறது ? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள், இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது ? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில். சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 24 - விதியை மாற்ற மகான்கள் போராடியும் மனிதன் ஏன் மாறுவதில்லை?


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல, மெல்ல மேலேற்ற, கடைத்தேற்ற, கரையேற்ற இறைவழி, அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இஃதொப்ப சராசரியாகவே வாழ்ந்து உண்டு, உறங்கி எஃதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு, தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக்கொள்வோம். அஃதோடு உண்மையான ஞானவாழ்வையும் அறிந்துகொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்துகொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை.

அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் எங்கள் நிலையிலிருந்து மிக,மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான ( பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற ) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது ? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே ? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே ? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 16 ஜூலை, 2026

துளிகள் - 23 - மனிதன் தர்மத்திற்கு கணக்கிட்டால், விதி கணக்குத் தீர்க்கும்!


தான தர்மத்தின் இன்னொரு முகம்!

இறைவன் அருளாலே யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. ‘இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன ? . தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும் ? ‘ என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான் ‘ இவனுக்கென்ன ? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் ? அவர்கள் செய்யட்டுமே ? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு ? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும் ? ‘ அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். ‘ இவனுக்கென்ன ? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அதற்கு நானா பொறுப்பு ? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும் ? ‘ என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

திங்கள், 13 ஜூலை, 2026

துளிகள் - 22 - துன்பம் தொடர்ந்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை ஆராயுங்கள்!


நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நேர்மையாகத்தான் நடக்கிறேன். நான் ஒழுங்காகத்தான் எல்லாவகையிலும் வாழ்கிறேன். ஆனாலும் துன்பம் தொடர்கிறது என்றால், ஒன்று இன்னமும் பூர்வீக பாவங்கள் குறையவில்லை என்பது பொருள். அஃதோடு சேர்ந்து, தற்காலத்திலும் அறிந்தும், அறியாமலும் இன்னும் பாவங்களைச் செய்துகொண்டிருக்கிறான் என்றும் பொருளாகும்.

எனவே, அவனவன் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய நேர்மையைக் கொஞ்சம்கூட ஒதுக்கி வைக்காமல், தன்னைத்தானே ஆய்வுசெய்து பார்த்தால், எங்கே தவறு இருக்கிறது? என்றும், ஏன் வாக்குகள் வரவில்லை? என்பதும் அவனவனுக்கே புரிய வரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

துளிகள் - 21 - ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் – இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?


இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோகாய ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய, பொது சேவை கருதி செய்யக்கூடிய, சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளை கருதி செய்யக்கூடிய காரியங்கள், தர்ம காரியங்கள், வழிபாடுகள், யாகங்கள், ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய செயல், லோகாய ரீதியாக செய்யக்கூடிய செயல், ஒரு இல்லம் வாங்க வேண்டும், ஒரு வாகனம் வாங்க வேண்டும், புதிதாக ஆடை வாங்க வேண்டும், வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 4 ஜூலை, 2026

துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!


ஒரு மனிதன் இறந்துவிட்டால் செய்ய வேண்டிய கடமைகளை, சித்தர்கள் நாங்கள் வகுக்கவில்லை. உடலைப் பிரிந்த ஆத்மா, உடலை விட்டதை அறியாமல், மிகுந்த குழப்பத்துடன் அலையும். அதற்கு தனது நிலையை உணர்த்துவதற்காகவே இச்சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இளம் வயதுடையவர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தில் மிகுந்த அளவில் வருத்தம் சில நாட்கள் இருக்கும். மனவருத்தத்துடன் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே முன்காலத்திலிருந்து தடைகளை வைத்திருக்கிறார்கள். நன்றாக வாழ்ந்து, அதிக வயதில் ஒருவர் இறந்தால் அந்தக் குடும்பத்தில் மனவருத்தம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும். பின்னர் அவரவர் தங்கள் பொறுப்பை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

வருத்தம் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை உணர்த்துவதற்கே, ஒருவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தினர், அவரவர் பிரிவின்படி 13 அல்லது 16 போன்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று வரும் நிகழ்ச்சியைச் சேர்த்துள்ளார்கள். கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்கும் பொழுது வேண்டுதல்கள் வைக்கலாம்; தவறில்லை. ஆனால் மனதில் வருத்தம் இருக்கக்கூடாது. வருத்தத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட மன அமைதி இருக்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!