வியாழன், 20 ஆகஸ்ட், 2026

துளிகள் - 56 - மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமா?


இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும்.

ஆனால் இறைவன் என்ன செய்தார்?

மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக்கூடிய அறிவையும் தந்து, அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்துவிட்டு வரட்டும் என்று தந்தால், மனிதன் நன்மையை நாடுவதைவிட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி, தன்னையும் கெடுத்துக்கொண்டு, தன் சந்ததியையும் கெடுத்துக்கொண்டு, இந்த உலகத்தையும் கெடுத்துக்கொண்டான்.

ஒரு வகையில் பார்த்தால், மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமாகிவிட்டது என்று கூட வேடிக்கையாகக் கூறலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 55 - தன்னை உணர்தலே இறைவனை நோக்கிய முதல் அடி!


எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ, எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறானோ, அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கிவிடுகிறான்.

இதிலிருந்தே அவன் இறைவனை நோக்கிச் செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 19 ஆகஸ்ட், 2026

துளிகள் - 54 - மனிதப்பிறவியின் நோக்கம் — புலன் வாழ்வைத் தாண்டி இறைநோக்கிப் பயணிப்பதே!


வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில், மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும், மேலும் மேம்பட சற்றே முயலாமல், அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு, உணர்வுகளுக்கு ஆட்பட்டு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மனிதர்களிடம் நிலவி வருகிறது.

இறைவனின் கருணையைப் பெறவும், மேலும் மேலும் இறை நோக்கிப் பயணம் செய்யவும், பாவங்களைச் சேர்க்காத வாழ்க்கை வாழவும், சேர்த்த பாவங்களைக் கழிக்கவும் மட்டுமே மனிதப்பிறவி என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ளவே பல பல பிறவிகள் ஆகிவிடுகின்றன.
அவன் புலன்களால் கண்டு, கேட்டு, உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆதலால், புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கிச் செல்வதற்குக் கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள, கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

துளிகள் - 53 - காசியில் இறந்தால் முக்தியா? — ‘காசி’ என்பதன் உண்மைப் பொருள்!


காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது.

காசியில் இறந்தால் முக்தி’ என்பது தவறான வாதம். காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலைநிறுத்தி இருந்தால் முக்தி என்று கொள்ள வேண்டும்.

காசியில் இருந்தால் முக்தி.

எனவே, காசியில் இறந்தால் முக்தி என்பது ஒரு தவறான வழக்காகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 52 - மனம் சுத்தமானால் தேசமும் சுத்தமாகும்!


நன்றாக கவனிக்க வேண்டும், எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலைப் பெருக்கி கோலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்கு பாரதத்தில்தான் இருக்கிறது.

சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்குப் போதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம், இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது.
முதலில் மனித மனம் சுத்தமானால், இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும் சிறு உயிர்கள் (கொசு, விஷ ஜந்துக்கள்), சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன் உருவாக்குவார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 12 ஆகஸ்ட், 2026

துளிகள் - 51 - சொந்த வீடு அமையத் தடையாகும் மனைதோஷம் விலகும் வழி!


சொந்த வீடு அமையா தோஷம் விலக, முதலில் ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும்.

ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்ப்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது.

எனவே, இதுபோன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள், அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு, குறிப்பாக செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வணங்கி, நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் முடிந்த பிரார்த்தனைகளை செய்துகொண்டே இருப்பதும், கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை, குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால், கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

துளிகள் - 50 - இறை நீதியை உணர, பாவங்களைக் கழிப்பதே முதல் படி!


இறை நீதி என்ற கொள்கை குறித்தும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் ஒரு மனிதன் இதுவரை சேர்த்த பாவங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்க்க வேண்டும் அல்லது கூடுமானவரை தான, தர்மங்களாலும், வழிபாட்டாலும், வேறு ஸ்தல யாத்திரைகளாலும் தீர்க்க வேண்டும்.

பாவங்கள் கடுகளவு இருந்தாலும் கூட பரிபூரணமாக இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது.

எனவே, இறைவனைப் புரிந்துகொள்ளவோ அல்லது இறை நீதியைப் புரிந்துகொள்ளவோ அல்லது முக்தி போன்ற நிலையை அடைவது குறித்தோ ஆய்வு செய்வதற்கு முன்னால், முதலில் உலகியல் ரீதியான கடமைகளை நேர்மையாக ஆற்றிக்கொண்டே, சேர்த்த பாவங்களையெல்லாம் நல்லவிதமாகக் கழித்து, தர்மத்தால் குறைத்துக்கொண்டே வந்தால், தாராளமாகப் பாவங்கள் குறையக் குறைய, அனைத்தும் உள்ளத்தில் தெள்ளத் தெளிவாகப் புலப்படத் துவங்கும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 49 - ஒரே ஆன்மா பல கூறுகளாகப் பிரிந்து பல பிறவிகள் எடுக்குமா?


பிறப்பு போன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும், புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்குப் பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால், நாங்கள் கூறுகின்ற விளக்கம், நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலை வரும்.

இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் ஏதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூடப் பிறக்கிறது.

இன்னொன்று தெரியுமா? ஒரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாகப் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுக்கூட ஒரே சமயத்தில் பல்வேறுவிதமான விலங்கு, பட்சி, இன்னும் புழு, பூச்சி தேகத்தைக்கூடப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆன்மாவைப் பிரிப்பதும், சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால், அது மிகப்பெரிய பாவதோஷமுள்ள ஆத்மா எனலாம்.

அதே சமயம், மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பல்நூறு கூறுகளாகப் பிரித்து, பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும்.

இறைவன் அல்லது இறைவனுக்குச் சமமான முனிவர்கள் இதனைச் செய்வார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள், செய்தும் இருக்கிறார்கள்.

பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் – இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 48 - தவிர்க்க முடியாத பாவங்களைப் புண்ணியத்தால் நீர்த்துப்போகச் செய்வோம்!


தாவர இனங்களை உண்பதால் பாவம் வராது என்று நாங்கள் கூறவில்லை. குறைந்தபட்சம் பாவம் வரத்தான் செய்யும். அதனால்தான் பிறவியே வேண்டாம் என்று இறைவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மனிதனாகப் பிறவியெடுத்துவிட்டாலே எத்தனைதான் நேர்மையாக வாழ்ந்தாலும், தவிர்க்க முடியாமல் சில பாவங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

எனவேதான் அதனையும் தாண்டி பலகோடி மடங்கு புண்ணியத்தைச் செய்தால் இந்தப் பாவம் நீர்த்துப் போகும். ஆனால் முன்னர் சொன்ன உயிர்க்கொலை பாவங்கள் நீர்த்துப் போகாது, அவ்வளவே.

மன்னிக்கக்கூடிய பாவம், மன்னிக்கவே முடியாத பாவம் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத பாவங்கள் இறையால் மன்னிக்கப்படலாம். சில பாவங்கள் இறையால் மன்னிக்கப்பட மாட்டாது.

எனவே, தெரிந்தும் எதற்கு ஒரு மனிதன் மன்னிக்கப்படாத பாவங்களைச் செய்ய வேண்டும்?

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 47 - படைத்தவனைப் பழிப்பதைவிட, பாவமற்ற மனதை வேண்டுவோம்!


மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்மவினை இருக்கிறது.

உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான்.

அதாவது ஏகன், ஏகனாகவே இருந்துவிட்டால் பிறகு பிரச்சினையே இல்லையே? ஏகன் எதற்கு அநேகனாக மாறினான்? என்று இவன் கேட்கிறான்.

ஏகன், அநேகனாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனைப் பார்த்து யாராவது ஒருவர், ‘நீ இப்படியே இரு. பல்கூறுகளாகப் பிரியாதே’ என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்குதான் அப்படிக் கூறுவதற்கு யாருமில்லையே? அப்படி யாராவது கூறவேண்டும் என்பதற்காகவாவது ஏகன், அநேகன் ஆகியிருக்கலாம் அல்லவா?

எனவே, ‘என்னை எதற்காகப் படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன்’ என்று கூறுவதைவிட, ‘நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மனநிலையை அமைத்துக்கொடு’ என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

துளிகள் - 46 - இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவினால் பாவங்கள் விரைவில் குறையும்!


தாய், தந்தையைப் பேணவேண்டும் என்ற நோக்கிலே, தாய், தந்தையை மதிக்கவேண்டும், போற்றவேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.

என்னதான் இரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும், இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுதுதான் விரைவில் பாவங்கள் குறைகின்றன.

எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனுக்கு அத்தியாவசியமான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவன் தவறினால், கடமை தவறிய குற்றம், பாவம் வந்து சேரும்.

இரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது, புண்ணியமும் சேராது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 45 - இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம் — தவறேதுமில்லை!


இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம், தவறேதுமில்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று.

மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருடபுராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும்பொழுது கருடபுராணம் ஓதினால்தான், இப்படியெல்லாம் வாழ்ந்தால் இப்படி தண்டனைகள் கிடைக்கும். இப்படியெல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான்.

ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருடபுராணம் குறைந்த அளவே. அதுவும் இடைச்செருகல்களோடு கிடைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் நரகம், சொர்க்கம் என்பது உண்மை. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்பூலோகமே நல்ல எண்ணம் கொண்டவனுக்கு, புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும், அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 8 ஆகஸ்ட், 2026

துளிகள் - 44 - குருவைத் தேடாதே — தகுதியான சிஷ்யனாக இரு!


தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து, “என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்தக் குருவை நான் பின்பற்ற வேண்டும்?” என்றெல்லாம் கூட கேட்பதுண்டு.

நாங்கள் கூறுவது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கின்ற எல்லோரும் குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ள உதவினால், அதுவும் குருதான்.

எனவே, நாங்கள் பொதுவாகக் கூறுவது என்னவென்றால், குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக் கூடாது. சிஷ்யனைத் தேடித்தான் குரு வரவேண்டும். அந்த அளவிற்கு அந்தச் சிஷ்யன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் ஆழ்வார்கள் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்தப் புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால், மற்றவை தானாக விளங்கும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 43 - மனதைச் செம்மைப்படுத்துவதே பூஜையின் நோக்கம்!


எல்லாவகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும். ஒரு மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா.

‘பூஜை செய்கிறேன்’ என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ, தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல.

எனவே, மனோரீதியாக ஒருவன் மனிதநேயத்தை வளர்த்துக்கொண்டு, மனதைச் செம்மைப்படுத்த, மனதை வைராக்யப்படுத்த, மனதை வைரம்போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் அந்தப் பூஜையைச் செய்து, அதனால் மனச்சோர்வுதான் மிச்சம் என்றால், அவன் அந்தப் பூஜையையே செய்யத் தேவையில்லை.

எனவே, சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

துளிகள் - 42 - பழனி முருகனையும் போகரையும் பூஜித்து வணங்கினால், அவரவர்க்கான வழியை உள்ளுணர்வின் மூலம் போகர் காட்டுவார்!


அவரவர்கள் பிரச்சினைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப்பெருமானையும், போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து, முருகப்பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து, நினைத்து, நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னின்ன பிணிக்கு இன்னின்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 5 ஆகஸ்ட், 2026

துளிகள் - 41 - அதிதி சேவையின் மகிமை — பித்ரு தோஷ நிவர்த்திக்கான எளிய வழி!


அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், தேகமெங்கும் அழுகியிருந்தாலும், அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும், அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து, பாதபூஜை செய்து, அவனை இல்லத்தில் அமரவைத்து, ஒரு உயர்ந்த மகானோ, ஞானியோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ, அப்படிச் செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும்.

ஏதோ ஒரு அன்னத்தை வாங்கினோம். "இந்தா! பிடித்துக்கொள்" என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், "இப்படியாவது செய்கிறார்களே சேய்கள்?" என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும், இந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தியில்லாமலும், குடும்பத்தில் குழப்பமும், அதிக மருத்துவச் செலவினங்களை ஏற்படுத்திக்கொண்டு, நோய் ஒன்று போய் ஒன்று என்று வந்துகொண்டே இருப்பது போல, எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும், சித்தப்பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனவே, எளிய வழிபாடுகளையும், தர்மகாரியங்களையும் செய்து, ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 40 - உச்சகட்ட பாவங்களின் வெளிப்பாடே தோஷங்கள்!


‘பித்ரு’ என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு.

ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து, வாழ்க்கையை முடித்துக்கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர்க்கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் “பிரம்மஹத்தி தோஷம்”. இதன் கிளைதான் “நாகதோஷம்”.

எனவே, இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தின் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பைக் கொன்றால் வரும் தோஷம் என்பது ஒரு தவறான நிலையாகும்.

எல்லா வகையான உச்சகட்ட பாவங்களின் ஒரு அடையாளம்தான் இதுபோன்ற தோஷங்களின் நாமகரணங்கள். நாமகரணங்களை விட்டுவிட்டு, உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கின்றன.

அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலே, முதலிலே காலபைரவர் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

அடுத்ததாக, பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, பாழ்பட்ட ஆலயங்களுக்குச் சென்று முடிந்த தொண்டுகளைச் செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

துளிகள் - 39 - உறவுகள் பயணத் துணைகளே — நிரந்தர பந்தங்கள் அல்ல!


குடும்பம் ஆனாலும், உறவானாலும், நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு, குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது.

இப்படி ஜென்ம, ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்?

கடந்த ஜென்மத்து தாய். அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா?

கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா?

இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தொலைதூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிறமனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலேதான் உறவுகளும்.

அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு, இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் கூறவில்லை.

இந்த நிலையிலே அவர்களுக்கு செய்யவேண்டிய நீதியான, நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்யவேண்டும்.

இந்த கருத்தை நன்றாக மனதிலே வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்துகொள்ளக்கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 1 ஆகஸ்ட், 2026

துளிகள் - 38 - குற்றம் தண்டனையின்றி தப்பாது — கர்மம் தன் நேரத்தில் செயல்படும்!


அடிப்படையில் லோகாயத விஷயங்களுக்காக வாழக் கற்றுக் கொண்ட மனிதன், எந்த குற்றத்தையும் செய்யத் தயங்குவதில்லை. குற்றம் செய்கின்ற யாருக்கும், எக்காலமும் இறைவன், உடனடியாக தண்டனை வழங்கியதாக சரித்திரம் இல்லை. இதைத்தான், மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 37 - நன்றும் தீதும் பிறர் தர வாரா — கர்மத்தின் மாறாத சத்தியம்!


பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம் ? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு ஏதாவது லாபமா ?  

மூதுரை ஒன்று இருக்கிறதல்லவா! ‘ நன்றும், தீதும் பிறர் தர வாரா ‘ என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!