மனத்தால் ஒருவரை குருவாக வரித்துக் கொண்டுவிட்டால், அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும், அவரது வார்த்தைகள் ஒருவர் மனதுக்கு அமைதியை தந்தால், அவரது வழிநடத்தல் நிறைய நல்லதை, நல்ல விஷயங்களை வாழ்வில் அளித்தால், அவர் குரு ஸ்தானத்துக்கு உரியவர்.
சீடர், மனதுள் குருவுக்கான மரியாதையை பிரார்த்தனை வழி கொடுத்தாலும் போதும்.
அதே நேரத்தில், சீடத்துவத்தை சோதிக்கும் படி மூன்றாவது மனிதர் குருவை இகழ்ந்தால், ரௌத்ரம் உள்ளே பொங்கினாலும், கட்டுப்பாடுடன் அமைதியாக அங்கிருந்து, "சிவ சிவா" என்று கூறி செவி பொத்தி விலகி விட வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.
இந்த கட்டுப்பாடு எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாராகினும், குருவை குறை கூறுவதை கேட்கும் பொழுது, அப்படி ரௌத்திரம் பொங்கி வார்த்தைகளை சிதறவிட நேர்ந்தால், இறையை துணைக்கழைத்து, நாக்கின் நுனியிலிருந்து வாக்குகளை உதிர்க்கலாம்.
உதிர்த்த வாக்குகள் குறிப்பிட்ட காலத்தில் அதன்படியே அவர்கள் வாழ்க்கையில் நடந்தால், அது இறை செயல், நம் செயல் அல்ல என்று உணர வேண்டும்.
ஆனால், எந்த காரணம் கொண்டும் எதிரே பேசுபவர் உயிர் போகிற அளவுக்கான வார்த்தைகளை பேசக்கூடாது. அது பிரம்மஹத்தி தோஷத்தை கொண்டு தந்து விடும்.
ஆனால் ஒன்றை கவனிக்கவும். வாக்கை உதிர்த்துவிட்டால், அடுத்த நொடி முதல் விஸ்வாமித்ரர் நிலை தான் நமக்கு. நாம் அன்று வரை சேர்த்துக் கொண்ட தவசக்தியின் பெரும் பகுதியை இழந்துவிடுவோம்!
மறுபடியும் நிறைய தவம் செய்ய வேண்டும், பழைய நிலையை அடைய!
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக